அடுத்த ஆண்டுக்குள் உலகமெங்கும் 15 கோடி பேர் கொடிய வறுமையில் தள்ளப்படுவார்கள் - உலக வங்கி

உலகம் முழுவதும் கொரோனா காரணமாக 3.58 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10½ லட்சம் பேர் கொரோனாவுக்கு இரையாகியும் உள்ளனர். மேலும், தொடர் ஊரடங்கு, பொதுமுடக்கத்தால் தொழில், வர்த்தகம் முடங்கின. பல கோடி பேர் வேலை இழப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் அடுத்த ஆண்டுக்குள் உலகமெங்கும் 8.8 கோடி பேர் முதல் 15 கோடி பேர் வரை கொடிய வறுமைக்கு ஆளாவார்கள் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதார பாதிப்பின் எதிரொலி காரணமாக இந்த வறுமைக்கு ஆளாவார்கள். கொரோனா மட்டும் தாக்காமல் இருந்திருந்தால் நடப்பு ஆண்டில் வறுமை விகிதம் 7.9 சதவீதமாக குறைந்திருக்கும் என உலக வங்கி கூறுகிறது. இதுகுறித்து உலக வங்கி தலைவர் டேவிட் மாஸ்பாபாஸ் கூறுகையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்றும், உலகளாவிய பொருளாதார மந்த நிலையும் உலக மக்கள் தொகையில் 1.4 சதவீதத்தினரை கொடிய வறுமையில் தள்ளிவிடும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், இந்த கடுமையான பின்னடைவை மாற்றி அமைத்து, வளர்ச்சியில் முன்னேற்றம், வறுமை குறைப்பு போன்றவற்றை அடைவதற்கு கொரோனாவுக்கு பின்னர் உலக நாடுகள் மாறுபட்ட பொருளாதாரத்துக்கு தயாராக வேண்டும். மூலதனம், தொழிலாளர் திறன் மற்றும் புதுமைகளை புதிய தொழில்கள் மற்றும் துறைகளில் செல்ல அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

தீவிர ஏழைகளை பெருமளவு கொண்ட பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியா குறித்த சமீபத்திய தகவல்கள் இல்லாமல் இருப்பது, உலகளாவிய வறுமையின் தற்போதைய மதிப்பீடுகளை சுற்றி கணிசமான நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது என்று உலக வங்கி குறிப்பிடுகிறது. மேலும், இந்தியாவுக்கான சமீபத்திய தரவுகள் இல்லாததால், அது உலகளாவிய வறுமையை கண்காணிக்கும் திறனை கடுமையாக தடுக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.