முதலாம் உலக போரின் போது நடந்த சம்பவத்திற்கு கனடா பிரதமர் மன்னிப்பு கோரினார்

கனடா: மன்னிப்பு கேட்டார்... முதலாம் உலகப் போரின் போது இடம்பெற்ற தவறுக்காக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மன்னிப்பு கோரியுள்ளார்.

போரில் பங்கு பற்றிய கறுப்பின படைவீரர்கள் திட்டமிட்ட அடிப்படையில் துன்புறுத்தப்பட்டதாகவும், ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பில் கனடாவின் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கோரியுள்ளார்.

போர் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் இழைக்கப்பட்ட தவறுகளுக்காக ட்ரூடோ அதிகாரபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார். மிக மோசமாக படைவீரர்கள் நடத்தப்பட்டமைக்காக மன்னிப்பு கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

1914ம் ஆண்டில் வெளிநாட்டில் போர் புரிவதற்கான படையணிகளில் கறுப்பினத்தவர்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை, தன்னார்வ அடிப்படையில் வந்தவர்கள் நிராகரிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் கறுப்பினத்தவர்கள் படையில் இணைக்கப்பட்ட போதிலும் அவர்கள் மிக மோசமாக நடத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களுக்காக கனேடிய பிரதமர் மன்னிப்பு கோரியுள்ளார்.