மாநில அரசுகள் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

நாடு முழுவதும் நடத்தப்படும் கொரோனா சோதனைகளில் 6.73 சதவிகிதம் பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொற்று உறுதியாகும் சதவிகிதம் என்பது வைரஸ் பரவல் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அளவிட உதவும் முக்கிய காரணியாக கருதப்படுகிறது.

எனவே, கொரோனா சோதனைகளை அதிகரித்து, தொற்று பரவலுக்கு காரணமான தொடர்புகளை கண்டறிவதுடன், தக்க நேரத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

தொற்று உறுதி சதவிகிதம் அதிகமாக இருப்பது, அறிகுறிகள் உள்ள நபர்கள் மட்டுமே சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை காட்டுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதே நேரம் தொற்று உறுதி விகிதம் குறைவாக இருப்பது, லேசான அல்லது அறிகுறியே இல்லாதவர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டது என்பதற்கு ஆதாரமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.