மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு பண்டிகை கால முன்பணமாக வட்டியில்லாமல் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் - நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று பேட்டி அளிக்கையில், நாட்டின் பொருளாதாரத்தில் தேவையைத் தூண்டும் வகையிலும், நுகர்வோரின் செலவு செய்யும் பழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும் மத்திய அரசு ஊழியர்களுக்குப் பண்டிகை கால முன்பணம் வழங்கப்படுகிறது என்று கூறினார்.

மேலும் அவர், 6-வது ஊதியக்குழுவில் பண்டிகை கால முன்பணம் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டாலும், பொருளாதாரச் சூழல் கருதி மீண்டும் வழங்கப்படுகிறது. இதன்படி மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் பண்டிகை கால முன்பணமாக ரூ.10 ஆயிரம் வட்டியில்லாமல் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த ரூ.10 ஆயிரம் என்பது ரூபே ப்ரீபெய்ட் கார்டில் வழங்கப்படும். இந்த கார்டில் உள்ள தொகையை 2021, மார்ச் 31-ம் தேதி வரை செலவு செய்ய முடியும். இந்த ரூ.10 ஆயிரத்தை ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதம் ரூ.1000 வீதம் 10 மாதங்களுக்குப் பிடித்தம் செய்யப்படும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மேலும் அவர், இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.4 ஆயிரம் கோடி செலவிடுகிறதாக கூறினார். தற்போது ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை காலங்கள் தொடங்கவுள்ளது. கொரோனாவுக்கு மத்தியில் கொண்டாடப்படவுள்ள இந்த பண்டிகைகளுக்கு முன்னெச்சரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.