மத்திய அரசின் மின் கட்டண முடிவு தமிழகத்திற்கு பொருந்தாது

சென்னை: தமிழகத்திற்கு பொருந்தாது... பயன்பாடு அதிகமுள்ள நேரத்திற்கேற்ப மின் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் முடிவு தமிழ்நாட்டில் வீட்டு நுகர்வோருக்கு பொருந்தாது என்று மின் உற்பத்தி பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மின் உற்பத்தி பகிர்மான கழகம் அளித்துள்ள விளக்கத்தில், தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் அதிகாரம் தமிழக ஒழுங்குமுறை ஆணையத்திற்கே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எனவே, அதிக பயன்பாடு உள்ள நேரத்தில் 20% வரை மின் கட்டணத்தை கூடுதலாக உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற விதியை பின்பற்றப் போவதில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ஸ்மார்ட் மீட்டர்கள் தொடர்பான அபராதத் தொகையையும் தாங்கள் நிர்ணயம் செய்யவில்லை என்று மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. இதனால், மத்திய அரசின் சட்டத் திருத்தத்தால் தமிழகத்தில் வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் விளக்கம் அளித்துள்ளது.