கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

கனமழைக்கு வாய்ப்பு... அடுத்த 24 மணிநேரத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உள் தமிழகம் மற்றும் அதனைஒட்டிய தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிக கன மழையும், வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், திருச்சி, புதுச்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், அரியலூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுர்ம், விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரபவலாக மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணிநேரத்தில் உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழையும் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான மழையும் பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பாம்பன் 12, தேவலா 10, சின்னக்கல்லார் 9 உள்ளிட்ட பகுதிகளில் அதிகபட்ச மழைப்பதிவாகியுள்ளது. குமரிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல், கேரளம்-கர்நாடகம் கடலோர பகுதிகள், லட்சதீவு பகுதிகளில் மீனவர்கள் செல்லவேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.