மழை, பலத்த காற்றுக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் சப்ரகமுவ, மத்திய, மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகலில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக்காணப்படும். மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என மீனவர்கள் அறிவுறுத்தப்படுவதோடு, கடலில் பயணம் செய்வோர் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.