அதிக கன்டெய்னர்களை கையாண்டு சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல் நிறுவனம் சாதனை

சென்னை துறைமுகத்தில் சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல் என்ற நிறுவனம் நிகழ்த்திய கன்டெய்னர்களை கையாளும் சாதனை குறித்து சென்னை துறைமுக கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அவ்வாறு சென்னை துறைமுக கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

‘எம்.வி., ஏ.பி.எல். இங்கிலாந்து’ என்ற சரக்கு கப்பல் சென்னை துறைமுகத்தின் இரண்டாவது முனையத்துக்கு வந்தது. இங்கு சரக்குகளை கையாளும் ‘சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல்’ என்ற நிறுவனம் கடந்த 4-ந் தேதி அன்று 8 ஆயிரத்து 397 கன்டெய்னர்களை கையாண்டு சாதனை படைத்துள்ளது.

இவற்றில் 4 ஆயிரத்து 276 கன்டெய்னர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 4 ஆயிரத்து 121 கன்டெய்னர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த கப்பல் கடந்த 8-ந் தேதி புறப்பட்டு சென்றது. இதற்கு முன்பு ‘எச்.எஸ். எவரெஸ்ட்’ நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 8-ந் தேதி அன்று 7 ஆயிரத்து 209 கன்டெய்னர்களை கையாண்டதுதான் இதுவரை சாதனையாக இருந்தது. அது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனைக்காக ‘சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல்’ நிறுவனத்தையும், துறைமுக அதிகாரிகளையும் சென்னை துறைமுக கழக தலைவர் பி.ரவீந்திரன் பாராட்டினார் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.