கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா?

சென்னை: கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில், 10, 11 மற்றும் 12 பொதுத் தேர்வுகள் முடிவடைந்தது. இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா அச்சம் காரணமாக, பொதுத் தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில், இந்தாண்டு கொரோனா குறைந்ததையடுத்து பொதுத் தேர்வு நடந்து முடிந்துள்ளது.

இதை அடுத்து, தமிழகத்தில் 2022 - 2023 ஆம் கல்வி ஆண்டுக்காக வரும் 13 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும், வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

இதன் காரணமாக கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதற்கிடையே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி மத்திய சுகாதாரத் துறை தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.

எனவே கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரும் 13 ஆம் தேதி பள்ளிகளை மீண்டும் திறக்க கல்வித் துறை திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கல்வித் துறை உயர் அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் மட்டும் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என்றும் கூறப்படுகிறது. மாணவர்கள் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயமாக்கப்படலாம் என்றும் தெரிகிறது.