ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி 5-ந் தேதி முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு நாளான வருகிற 5-ந் தேதி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது தொடர்பாக அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

காலத்தால் அழியாத புரட்சிகரமான திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களையும், எழுச்சியையும் ஏற்படுத்திய ஜெயலலிதாவின் அமரர் ஆகிய நாளான 5-ந் தேதி அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்துவது கட்சியினர் ஒவ்வொருவரின் இன்றியமையாத கடமையாகும். ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு நாளான 5-ந் தேதி காலை 10.45 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அன்னாரின் நினைவிடத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்கள்.

ஜெயலலிதா நினைவு நாளன்று மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சி பகுதி, வட்ட அளவில் கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவரும் அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே ஜெயலலிதாவின் உருவப்படங்களை வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் செய்ய வேண்டும்.

மேலும், அ.தி.மு.க. அமைப்புகள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கேரளா, டெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் வருகிற 5-ந் தேதியன்று ஆங்காங்கே ஜெயலலிதாவின் உருவப்படங்களை வைத்து, மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.