முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நோய் தொற்றுக்கு உயர் அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் பலர் உள்ளாகி வருகின்றனர். உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 8-ந் தேதி மின்துறை அமைச்சர் பி.தங்கமணிக்கும், அவரது மகன் தரணிதரனுக்கும் பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

அமைச்சர் பி.தங்கமணி 7-ந் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அதற்கு முந்தைய நாள் (6-ந்தேதி) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். எனவே, அமைச்சர் பி.தங்கமணியை சந்தித்தவர்கள் எல்லாம் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர்.

அந்த வகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அவரது அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொண்டனர். இந்தநிலையில், பரிசோதனை முடிவுகள் நேற்று வெளிவந்தது. அதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

இந்நிலையில் நேற்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.