முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கன்னியாகுமரி மற்றும் நெல்லை வருகை

அருமனையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழா மற்றும் அமைச்சர் ராஜலட்சுமியின் குடும்ப விழாவில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கன்னியாகுமரி மற்றும் நெல்லைக்கு வருகிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் 12.10 மணிக்கு அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையத்திற்கு செல்கிறார். அங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடி விமான நிலையத்தை பிற்பகல் 2.45 மணிக்கு சென்றடைகிறார்.

அங்கிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு நாகர்கோவில் ஆய்வு மாளிகைக்கு செல்கிறார். அங்கு ஓய்வெடுக்கும் அவர் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு அருமனையில் கிறிஸ்துமஸ் விழா நடக்கும் இடத்தை மாலை 6.30 மணிக்கு சென்றடைகிறார்.

விழா முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு நெல்லைக்கு செல்கிறார். இன்றிரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெல்லையில் தங்குகிறார். நாளை காலை 9.15 மணிக்கு புறப்பட்டு சங்கரன்கோவிலுக்கு காலை 10 மணிக்கு செல்கிறார். அங்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமியின் குடும்ப விழாவில் பங்கேற்கிறார்.

அதன்பின், பிற்பகல் ஒரு மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வரும் அவர், அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டு பிற்பகல் 3.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.