ஊரடங்கை எவ்வாறு தொடரலாம்? கலெக்டர்கள், நிபுணர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. ஆனாலும் இன்னும் பள்ளி- கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மெரினா கடற்கரை உள்பட பொழுது போக்கு பூங்காக்களும் முழுமையாக திறக்கப்படவில்லை. 100 பேர்களுக்கு மேல் கூடும் அரசியல் கூட்டங்களுக்கும் அனுமதி இல்லை.

கொரோனா தொற்று தமிழகத்தில் தற்போது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், அடுத்த மாதம் மேலும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக அடுத்த கட்ட முடிவுகளை மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி மாவட்டக் கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

ஆலோசனையின் போது, இந்த ஊரடங்கை எவ்வாறு தொடரலாம்? கொரோனா மேலும் பரவாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? கொரோனா 2-வது அலை வீச எந்த அளவுக்கு சாத்தியம் உள்ளது? பள்ளி, கல்லூரிகளை திறக்கலாமா போன்ற அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதனையடுத்து இன்று மலை அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.