கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட முதலமைச்சர் 3 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 4 ஆயிரத்து 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது.

நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 47 ஆயிரத்து 912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து 97 ஆயிரத்து 310 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,099 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். இன்று கிருஷ்ணகிரி செல்லும் முதலமைச்சர், நாளை சேலம் மற்றும் வெள்ளிக்கிழமையன்று ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும் அங்கு பல்வேறு நலத்திட்டப் பணிகளையும் அவர் திறந்து வைக்கிறார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை அவர் சென்னை திரும்புகிறார்.