இந்தியாவை சேர்ந்த 10 ஆயிரம் பேரை வேவு பார்க்கும் சீனா

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லை விவகாரம் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் மோதல் அதிகரித்து வருகிறது. லடாக் மோதலையடுத்து எல்லையில் இந்திய-சீன வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மோதலையடுத்து இந்தியாவில் செயல்பட்டு வந்த 100-க்கும் அதிகமான சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், ராணுவ தலைவர்கள், நிறுவனங்களை சீனா உளவு பார்ப்பதாக பல நாட்களாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. சீனா உளவு பார்க்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா உள்ளதும் இதில் 10 ஆயிரம் இந்தியர்கள் இலக்காக உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ’தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நடத்திய கள ஆய்வில் சீனாவை சேர்ந்த சேன்ஹூனா தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இந்தியாவின் 10 ஆயிரம் முக்கிய நபர்களை ரகசியமாக உளவு பார்ப்பது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தற்போது பூதாகாரமாகி வருவதால், இந்திய தலைவர்களை சீன நிறுவனம் உளவு பார்ப்பது தொடர்பாக ராஜ்ய சபாவில் காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பினர். இது தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதால் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. பிரதமர், ஜனாதிபதி உள்பட இந்தியாவின் 10 ஆயிரம் பேரை சீன நிறுவனம் உளவு பார்ப்பதாக வெளியான தகவலையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விசாரணையை தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் நடத்த மத்திய அரசு ஆணை பிறப்பித்து, 30 நாட்களுக்குள் முடித்து அறிக்கை சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது சீன நிறுவனம் வேவு பார்ப்பதாக வந்த தகவலையடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் சீனாவிடம் கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால் இருநாடுகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.