தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது

தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது... சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடா்பான வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை காவல்நிலைய காவலர்கள் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நடிகை சித்ரா சில தினங்களுக்கு முன்பு பூந்தமல்லி அருகே உள்ள தனியாா் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அவரது இறப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சித்ராவின் தந்தை காமராஜ், நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், சித்ராவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்திடம் காவல்துறையினா் கடந்த 6 நாள்களாக விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், ஹேம்நாத்தும் சித்ராவும் ஏற்கெனவே பதிவுத் திருமணம் செய்து கொண்டதால் சித்ராவின் இறப்பு குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி, ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ, சித்ராவின் தாய் விஜயா, அக்கா சரஸ்வதி, புகாா் தாரரும் தந்தையுமான காமராஜ், அண்ணன் சரவணன் ஆகியோரிடம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நேற்று திங்கள்கிழமை 3 மணிநேரத்துக்கு விசாரணை நடத்தினாா்.

இதையடுத்து, சித்ராவின் கணவா் ஹேம்நாத்திடம் வருவாய்க் கோட்டாட்சியா் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

சித்ரா தற்கொலை தொடர்பாக கடந்த 6 நாள்களாக நசரத்பேட்டை காவல்நிலையத்தில் ஹேம்நாத்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து கோட்டாட்சியா் விசாரணை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது செய்துள்ளனர் நசரத்பேட்டை காவல் நிலைய காவலர்கள்.

தனது மகள் சித்ரா தற்கொலைக்கு ஹேம்நாத் தான் காரணம் என சித்ராவின் தாயார் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.