சோத்துப்பாறை அணை மூன்றாவது முறையாக முழுமையாக நிரம்பியது

பெரியகுளம்: ஒரே ஆண்டில் 3வது முறையாக நிரம்பியது... பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக நிரம்பியதால் அணைக்கு வரும் உபரிநீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை இந்த ஆண்டு மூன்றாவது முறையாக அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் போனதால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் முழுமையாக நிரம்பியிருந்த அணையின் நீர்மட்டம் 124.20 அடியாக குறைந்தது.

இந்நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டியது. மேலும் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

தென்மேற்கு பருவமழையின் போது அணை கடந்த மாதம் இரண்டாம் முறையாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்து. தற்போது ஒரே ஆண்டில் மூன்றாம் முறையாக அணை அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தற்பொழுது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 97 கன அடியாக உள்ள நிலையில், அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மேலும், அணையில் நீர் இருப்பு 100 மில்லியன் கன அடியாக உள்ளது.