பாகிஸ்தானில் கிறிஸ்தவ தாய், மகன் சுட்டுக் கொலை

இரக்கமில்லாத கொலை... பாகிஸ்தானில் மத சிறுபான்மையினருக்கு நேரும் கொடும் சித்திரவதைகளுக்கு எடுத்துக்காட்டாக ஒரு கிறிஸ்தவ தாயும் அவரது மகனும் இஸ்லாமிய அடிப்படைவாத கும்பலால் இரக்கமின்றி கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் குஜ்ரான்வாலா நகரில் முஹம்மது ஹசன் என்ற நபரின் தலைமையிலான கும்பலால் யாஸ்மின் மற்றும் அவரது மகன் உஸ்மான் மசிஹ் ஆகியோர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தியாவும், பாகிஸ்தானில் உள்ள பல சிறுபான்மை குழுக்களும், பாகிஸ்தானில் நடக்கும் மதத் துன்புறுத்தல் பிரச்சினையை உலக அரங்கில் தொடர்ந்து எழுப்பியுள்ளன. ஆனால் சர்வதேச அழுத்தங்களுக்குப் பிறகும், இந்த அட்டூழியங்களைத் தடுக்க பாகிஸ்தான் தவறிவிட்டது.

இதற்கிடையில், கராச்சியில் உள்ள ஒரு மதகுருவுக்கு எதிராக பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரண்ட் பிறப்பித்தது. வலுக்கட்டாயமாக இஸ்லாமிற்கு மாற்றப்பட்ட ஒரு மைனர் கிறிஸ்தவ சிறுமியின் திருமணத்தையும் ரத்து செய்தது.

அக்டோபர் 16’ம் தேதி சிறுமி தாக்கல் செய்த வழக்கில் தப்பியோடியதாக அறிவிக்கப்பட்ட காசி முப்தி அகமது ஜான் ரஹீமி, மதமாற்றம் மற்றும் குழந்தைத் திருமணம் தொடர்பான மற்றொரு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

கிறிஸ்தவ சிறுமி வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டு முகமது இம்ரான் என்ற நபரை மணந்த வழக்கை விசாரித்த பின்னர் கராச்சி நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. சிறுமி தனது வழக்கில் மதகுரு, அவரது கணவர் மற்றும் அவரது நான்கு உறவினர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.