பெங்களூருவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவு

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக உள்ளது. இதனால் அங்கு கொரோனாவை கட்டுப்படுத்த வருகிற 22-ந் தேதி அதிகாலை 5 மணி வரை ஒரு வாரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு வாரம் ஊரடங்கு நாளையுடன் முடிவடையவுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூருவின் 8 மண்டலங்களின் பொறுப்பாளர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்தி இருந்தார். அப்போது ஊரடங்கை நீட்டிக்கப்படாது என எடியூரப்பா திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.

இந்நிலையில் சென்னை, டெல்லி போன்ற நகரங்களை ஒப்பிடுகையில் பெங்களூருவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று சில மந்திரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஊரடங்கை நீட்டிக்க முதல்-மந்திரி எடியூரப்பா விரும்பவில்லை.

தற்போது பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தற்போதுள்ள நிலைமை குறித்த அறிக்கையை 8 மண்டலங்களின் பொறுப்பு மந்திரிகள் முதல்-மந்திரியிடம் இன்று வழங்க உள்ளனர். மேலும் 8 மண்டலங்களின் மந்திரிகள், அதிகாரிகளுடன் எடியூரப்பா இன்று ஆலோசனை நடத்தி ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டமா? என்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.