பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் நாளை ஆலோசனை

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கே ஏறக்குறைய 975 கி.மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

இது இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை காலை புயலாகவும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் வரும் 2-ம் தேதி மாலை இலங்கையை கடந்து குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும். இதனால் கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தலைமை செயலகத்தில் நாளை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம், வருவாய்த்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

தென் மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.