மீன் விற்பனை செய்ய இடம் ஒதுக்க கேட்டு கலெக்டர் அலுவலகம் முற்றுகை

திருச்சி: திருச்சி அருகே மீண்டும் மீன் விற்பனை செய்ய இடம் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி மீனவர்கள் குடும்பத்தினருடன் ஆட்சியர் அலுவலக வாயிலை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள வாளாடியில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தில் சுமார் 100 பேர் உறுப்பினராக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் காவிரி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் பிடிக்கும் மீன்களை வாளாடி பகுதியில் சுமார் 40 வருடங்களாக மீன்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றுநோய் காலத்தில் மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் வாளாடி சிவன் கோவில் மேற்கு பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கு தற்போது விற்பனை செய்து வந்தனர்.

தற்போது நெடுஞ்சாலைத்துறை அந்த இடத்தை காலி செய்ய வலியுறுத்தி ஜேசிபி இயந்திரம் மூலம் குழி பறித்து அந்த இடத்தில் விற்பனை செய்ய முடியாமல் செய்துவிட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு அளித்தும் இதுவரை எந்த வகையில் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மீன் வியாபாரம் செய்து வருபவர்கள் தங்கள் குடும்பத்துடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலை முற்றுகையிட்டனர். பின்னர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.