பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறுபரீசிலனை செய்ய குழு அமைப்பு - பிரதமர் மோடி அறிவிப்பு

இந்தியாவின் 74-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார். அதன்பின் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

பிரதமர் மோடி உரையாற்றியபோது, பெண்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் இந்தியாவை வலிமையடையவும், பெருமையடையவும் செய்கின்றனர். பெண்களுக்கு சுயவேலைவாய்ப்பிலும், வேலைவாய்ப்பிலும் சமமான வாய்ப்புகளை வழங்க நாடு உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பெண்கள் இன்று நிலக்கரி சுரங்கப்பணிகளிலும் வேலை செய்கின்றனர். நமது மகள்கள் போர் விமானங்களை ஓட்டி வானத்தையும் தொடுகின்றனர். நமது மகள்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறுபரீசிலனை செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளோம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மேலும் அவர், அந்த குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது நிர்ணயம் தொடர்பாக உரிய முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும், ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 ஆகவும் உள்ளது.