சென்னையில் காங்கிரஸ் நடத்திய மவுன போராட்டம்

சென்னை: ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நடந்த மவுன போராட்டத்தில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து அவரை மத்திய அரசு எம்.பி. பதவியிலிருந்து நீக்கியது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கடும் அதிருப்தியடைந்த காங்கிரஸ் கட்சி, தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. தமிழகத்திலும் தொடர் அறவழி போராட்டங்களை காங்கிரஸ் கட்சி நடத்தி வருகிறது. அவ்வகையில் இன்று சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில் அறவழி மவுனப் போராட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், தங்கபாலு, விஜய் வசந்த் எம்.பி. மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.