மதுரை மாவட்டத்தில் புதிதாக 260 பேருக்கு கொரோனா உறுதி

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 7,597 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று புதிதாக 260 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 714 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 416 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 2,236 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 7,597 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று காலை நிலவரப்படி 260 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,857 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,534 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 134 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க மாவட்டம் முழுவதும் பல்வேறு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுகாதாரத் துறையினர் வீடு வீடாக பரிசோதனை செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.