தேனி மாவட்டத்தில் புதிதாக 308 பேருக்கு கொரோனா உறுதி

தேனி மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவால் 5,664 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதிதாக 308 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 57 ஆயிரத்து 613 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 56 ஆயிரத்து 998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 96 ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் நோய் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 132 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் போன்ற தென்மாவட்டங்களில் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவால் 5,664 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று புதிதாக 308 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 5,972 ஆக அதிகரித்துள்ளது. தேனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 3,180 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,724 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.