மக்களின் தூக்கம், உணவுப்பழக்கம் போன்றவற்றை மாற்றியமைத்த கொரோனா ஊரடங்கு

சீனாவின் வுகானில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லாத நிலையில் வேகமாக பரவிய கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் ஒரே வழியாக வீட்டிலேயே முடங்குதல் என்ற ஒன்றே சிறந்த வழியாக அரசுகளுக்கு பட்டது.

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் உலகின் பல நாடுகள் ஊரடங்கு எனும் பொது முடக்கத்தை அமல்படுத்த தொடங்கின. அமெரிக்கா போன்ற வல்லரசுகள் நாடுகளும் கொரோனாவில் இருந்து தப்பித்துக்கொள்ள பொது முடக்கத்தை நோக்கியே மக்களை திருப்பி விட்டன. இந்த சர்வதேச முடக்கம் முதலில் மக்களுக்கு அசவுகரியங்களை கொடுத்தாலும், பின்னர் அதற்கேற்ப வாழ தங்களை அவர்கள் தகவமைத்துக்கொண்டனர்.

மாதக்கணக்கில் நீண்ட இந்த ஊரடங்கு அவர்களுக்கு புதிய பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுத்து உள்ளது. இந்த ஊரடங்கால் மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் அமெரிக்காவின் லூசியானா பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் மக்களிடம் நடத்திய ஆய்வில், வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவுகள் மக்களுக்கு நேர்மறையான ஆரோக்கியத்தை கொடுத்திருக்கின்றன. ஆரோக்கியமான உணவு பழக்கம் அதிகரித்து இருக்கிறது. குறைந்த அளவில் அடிக்கடி உண்பதால் இந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

அதேநேரம் அதிக நொறுக்குத்தீனி, குறைவான உடற்பயிற்சி, தாமதமாக படுக்கைக்கு செல்தல், குறைவான தூக்கம், கவலைகள் இரட்டிப்பு போன்றவற்றுக்கு இந்த ஊரடங்கு காரணமாகி இருக்கிறது. உடல் பருமன் கொண்டவர்களை பொறுத்தவரை இந்த ஊரடங்கு நாட்களில் அவர்களுக்கு மேலும் எடை அதிகரிப்பால் அவதிப்படுகின்றனர். அதேநேரம் அவர்களது மனநலம் வெகுவாக பாதிக்கப்பட்டு எடை அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த ஊரடங்கு நாட்கள் உடல் பருமன் போன்ற நாள்பட்ட நோய்களை மக்களுக்கு கொண்டு சேர்த்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.