ரஷ்யாவில் கொரோனா பலி எண்ணிக்கை 11,017 ஆக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.26 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5.62 லட்சத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 11,000 -ஐ கடந்தது. இதுகுறித்து ரஷ்யாவில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 174 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 11,017 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 6,635 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது.

ரஷ்யாவில் இதுவரை சுமார் 7 லட்சத்து 13 ஆயிரத்து 936 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 4 லட்சத்துக்கு அதிகமானவர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கடந்த ஒரு மாதமாகவே ஒவ்வொரு நாளும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தலைநகர் மாஸ்கோவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பில் நான்காவது இடத்தில் ரஷ்யா உள்ளது.