வேலூர் மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 45 ஆக உயர்வு

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த சையது ரபிக் அகமது (வயது 62) நேற்று முன்தினம் சி.எம்.சி. மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் மாலை 3.30 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேபோல், காட்பாடி பகுதியை சேர்ந்த கண்ணன் (49) கடந்த 8-ந் தேதி கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று மாலை 6 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குடியாத்தம் பகுதியை சேர்ந்த மல்லிகேஸ்வரி (வயது 64) என்பவருக்கு உடல்நிலை சரியில்லாமல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மூதாட்டியின் உடல் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

அதேபோல் ராணிப்பேட்டையை சேர்ந்தவர் மோகனாம்பாள் (82). கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், தொற்று இருப்பது உறுதியானது. அதைத்தொடர்ந்து அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா தனிவார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேபோல் வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (40). இவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 42 பேர் கொரோனாவிற்கு பலியாகி இருந்தனர். இந்த நிலையில் 3 பேர் நேற்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர்கள் மூலம் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.