ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா

மேலும் 28 பேருக்கு கொரோனா... நுவரெலியா- வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் 21 பெண்களும் 7ஆண்களும் உள்ளடங்குவதுடன், அம்பகமுவ பிரதேச செயலகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளதாகவும் அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 14 ஆம் திகதி வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்த மவுண்ட்ஜின் தோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவரோடு தொடர்பை பேணிய 60 பேருக்கு கடந்த 17 ஆம் திகதி பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில், இதுவரையில் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் 39 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.