மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா உறுதி

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 3,423 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 42 ஆயிரத்து 955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 58 ஆயிரத்து 378 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,385 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 3,423 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,703 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 967 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 51 பேர் உயிரிழந்துள்ளனர்.