நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு பத்தாயிரத்தை தாண்டியது!

நெல்லை மாவட்டத்தில் 109 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,068-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 45 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 86 ஆயிரத்து 173 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 608 ஆக அதிகரித்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று வரை 9,959 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 8,490 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,289 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 180 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 109 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,068-ஆக உயர்ந்துள்ளது.