விருதுநகர் மாவட்டத்தில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 86 ஆயிரத்து 397 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 306 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து 5 லட்சத்து 30 ஆயிரத்து 708 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 383 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 29 ஆயிரத்து 166 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 237 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 4 ஆயிரத்து 312 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 13 ஆயிரத்து 845 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு முகாமில் 14 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வீடுகளில் 51 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,273 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று முன்தினம் 633 பேருக்கு மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 750 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அதை விட குறைவாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுளளது.

மாவட்டம் முழுவதும் பரிசோதனை நடத்துவதில் போதிய முனைப்பு காட்டாத நிலை உள்ளதால் பரிசோதனை எண்ணிக்கை குறைவதால், பாதிப்பு எண்ணிக்கையும் குறைவாகவே தெரிவிக்கப்படுகிறது.