செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 10,289 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்து 643 ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் 88 ஆயிரத்து 377 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் காரணைப்புதுச்சேரி ஊராட்சியில் கோகுலம் காலனி பகுதியில் வசிக்கும் 20 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானது. ஊரப்பாக்கம் ஊராட்சியில் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த 37 வயது ஆண், ராம்நகர் கோதாவரி தெருவை சேர்ந்த 4 வயது சிறுமி, செந்தில் ரெயில் நகரை சேர்ந்த 31 வயது வாலிபர், ரேவதிபுரம் பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞர், வண்டலூர் சிங்காரத்தோட்டம் மெயின் தெருவை சேர்ந்த 29 வயது வாலிபர், 22 வயது இளம்பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது.
கூடுவாஞ்சேரி எஸ்.ஐ.எஸ். அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 23 வயது இளைஞர், 55 வயது பெண், கீரப்பாக்கம் பி.எஸ்.எப்.குடியிருப்பு பகுதியை சேர்ந்த 40 வயது ஆண், கூடுவாஞ்சேரி டிபன்ஸ் காலனி 2-வது தெருவை சேர்ந்த 54 வயது ஆண், மறைமலைநகர் திருமூலர் தெருவை சேர்ந்த 46 வயது ஆண், எஸ்.ஆர்.எம். விடுதியில் வசிக்கும் 5 இளைஞர்கள் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,289 ஆனது. இவர்களில் 7,517 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 207 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.