தென்காசி அரசு மருத்துவமனையில் கொரோனா ஆய்வகம் அமைப்பு

தென்காசி மருத்துவமனையில் கொரோனா ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைக்காக சேகரிக்கப்படும் சளி மாதிரிகள் திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் அரசு மருத்துவமனை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில், தென்காசியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.65 லட்சம் மதிப்பில் கொரோனா ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வகத்தை தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் முருகவேல், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதிதாகத் திறக்கப்பட்ட ஆய்வகத்தில் சளி மாதிரி சோதனைப் பணி தொடங்கியுள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, 'முதல் நாளில் 5 மாதிரிகளும், இரண்டாம் நாளில் 15 மாதிரிகளும் சோதனை செய்யப்பட்டன. அதே மாதிரிகள் திருநெல்வேலி ஆய்வகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

தென்காசி ஆய்வகத்தில் செய்யப்பட்ட பரிசோதனையிலும், திருநெல்வேலியில் செய்யப்பட்ட பரிசோதனையிலும் ஒரே மாதிரியான முடிவு வந்தால் படிப்படியாக சோதனைகள் அதிகரிக்கப்படும்' என்றனர்.