கொரோனா பரவல் உயர்வு .. திரையரங்குகளில் முககவசம் அணிவது கட்டாயம்

சென்னை: இனி இங்கெல்லாம் முக கவசம் கட்டாயம் .... தமிழகத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், கொரோனா பரவல் சங்கிலியை உடைத்தெறிய பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.இதையடுத்து அதன் ஒரு பகுதியாக கடந்த 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முககவசம் அணிவது கட்டாயம் என்று அறிவித்திருந்தது. அடுத்தக்கட்ட நடவடிக்கையாக திரையரங்கு உள்ளிட்ட மேலும் சில இடங்களிலும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்திருப்பதாவது, “தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது அச்சமடையும் வகையில் இல்லை. மிதமான அளவில்தான் இருக்கிறது. தற்போதைய சூழலில் பெரிய அளவில் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துவருகிறோம். ஆஸ்பத்திரிகளில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள், குளிர்சாதன வசதி கொண்ட அரங்குகள், மூடப்பட்ட அரங்குகள் உள்பட மக்கள் அதிகமாக கூடும் அரங்குகளில் இருப்பவர்கள் அனைவரும் முககவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை உத்தரவாக பிறப்பிக்காமல் அறிவுறுத்தலாக வழங்கியிருக்கிறோம். ஏனென்றால் மூடப்பட்ட அறைகளில் அதிக நேரம் இருப்பதால் கொரோனா பரவுவதற்கு வாய்ப்புயிருக்கிறது. கொரோனாவுக்கான அறிகுறி இருப்பவர்கள் வெளியே செல்லவேண்டாம். வெளியே கட்டாயம் செல்லவேண்டும் என்றால் அவசியம் முககவசம் அணிந்து செல்லவேண்டும். மேலும் அறிகுறி இருப்பவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு, உடனடியாக பரிசோதனை செய்யவேண்டும். வயதானவர்கள், இணைநோய் உள்ளவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

எனவே அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களை வெளியே அழைத்துச் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு முககவசம் அணிந்து அழைத்துச்செல்லவேண்டும். காற்றோட்டத்துடன் திறந்தவெளி அரங்கமாக இல்லாமல் மூடப்பட்ட அறைகளில் இருப்பவர்கள் அனைவரும் முககவசம் அணியவேண்டும். முககவசம் அணிவது கொரோனாவுக்கு மட்டுமின்றி, சுவாசநோய்கள் வராமல் இருப்பதற்கும் பாதுகாப்பானதாக இருக்கும். எனவே முககவசம் அணியவேண்டும்” என அவர் கூறியுள்ளார்.