காவலர்களை குறிவைக்கும் கொரோனா வைரஸ்: சென்னையில் 511 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் முன் வரிசையில் நின்று பணியாற்றியவர்கள் போலீசார்களே. இதன் காரணமாக தமிழகத்தில் பல காவலர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.

சென்னை போலீசில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை போலீசில் 491 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை புதிதாக மேலும் 20 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 511 ஆக உயர்ந்தது.

புதிய தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் நேற்று ஒரு உதவி கமிஷனரும் இடம் பெற்றார். அது போல டி.ஜி.பி. அலுவலகத்தில் ஏற்கனவே 28 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று 2 டி.எஸ்.பி.க்களுக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் டி.ஜி.பி. அலுவலகத்தில் 30 பேர் பாதிக்கப்பட்டனர்.

சென்னை போலீசில் பாதிக்கப்பட்டவர்களில் 182 பேர் பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பி உள்ளார்கள். மந்தைவெளி போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர்களை கொரோனா கலங்க வைத்துள்ளது. அதேபோல் மாம்பலம் போலீஸ் குடியிருப்பிலும் கொரோனா தொற்றால் பீதி ஏற்பட்டுள்ளது.