ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரபரப்பு: கொரோனா நோயாளி தப்பியோட்டம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 10,548 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 145-ஆக உள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12,762 ஆக அதிகரித்துள்ளது. 6,304 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 106-ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பு ஒரு புறம் இருக்க தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் மருத்துவமனைகளில் இருந்து தப்பியோடுவதும், தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி ஒருவர் தப்பியோடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தப்பியோடியவர் சேத்துப்பட்டையை சேர்ந்தவர். அவருக்கு வயது 63. அந்த ஆண் நபரை தேடும் பணியில் சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவரை பற்றி தெரிந்தவர்கள் சுகாதாரத்துறை அல்லது காவல் துறையிடம் தகவல் தெரிவிக்கலாம்.