புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு கொரோனா உறுதியானதால் கோவையில் இருக்கும் அவரது சங்கீதா மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 3,645 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,622ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது.

கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வந்து கொண்டிருப்பினும், இந்த மாத தொடக்கத்தில் இருந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு கொரோனா உறுதியானதால், கோவையில் இருக்கும் அவரது சங்கீதா மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

அந்த மருத்துவமனையை கவனித்து வந்த போது அவருக்கு கொரோனா பரவியதாகவும் இதனால் கிருஷ்ணசாமியின் வீடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், கிருஷ்ணசாமி உட்பட அவர் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.