உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 19 லட்சத்து 41 ஆயிரமாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 1 கோடியே 19 லட்சத்து 41 ஆயிரத்து 774 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் உலகம் முழுவதும் 2 லட்சத்து 7 ஆயிரத்து 743 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 44 லட்சத்து 92 ஆயிரத்து 954 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 196 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 68 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா காரணமாக இதுவரை 5 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா அதிகம் பரவிய நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் நீடிக்கிறது.