சிவகங்கை மாவட்டத்தில் 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் உடல் நலம் பாதிப்படைந்த சிவகங்கையை சேர்ந்த 56 வயது ஆண் ஒருவரும், காரைக்கடி சூடாமணிபுரத்தை சேர்ந்த 67 வயது பெண் ஒருவரும் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதேபோல் சிகிச்சையில் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த ஒட்டபாளையத்தை சேர்ந்த 70 வயது ஆண் ஒருவரும், பார்த்திபனூரை சேர்ந்த 56 வயது ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் சிகிச்சையில் இருந்தவர்களில் பூரண குணமடைந்து 13 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக தேவகோட்டை மற்றும் காரைக்குடியில் தலா 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.