இந்தியாவில் இதுவரை 4 லட்சத்து 73 ஆயிரத்து 105 பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை தொடர்ந்து அதிகரிப்பதாலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 473105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 16922 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 418 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14894 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 271697 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 57.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 186514 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நேற்று வரை 75,60,782 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,07,871 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் விபரம்:-
மகாராஷ்டிரா - 1,42,900
டெல்லியில் - 70,390
தமிழ்நாடு - 67,468
குஜராத் - 28,943
ராஜஸ்தான் - 16009
மத்திய பிரதேசம் - 12448