இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 8 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் அடங்காமல் அதி வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் இதுவரை 8 லட்சத்து 20 ஆயிரத்து 916 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 519 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 123 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 5 லட்சத்து 15 ஆயிரத்து 386 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2 லட்சத்து 83 ஆயிரத்து 407 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,38,461 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,32,625 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 9,893 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 130261 பேருக்கும், டெல்லியில் 109140 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.