42 பேருக்கு கொரோனா... மொரட்டுவையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையை அடுத்து 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பேலியகொடை மீன் சந்தையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை இனங்கண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போதே இவர்கள் அடையாளம் காணப்பட்டனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பரிசோதனையின் பின்னரே மொரட்டுவ பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொரளையில் 20 பேருக்கும் கொட்டாஞ்சேனையில் 44 பேருக்கும்
மட்டக்குளியில் 36 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்
அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில், மரணித்த இரண்டு பேரின் சடலங்களுக்கு, சட்ட
வைத்திய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனைகளில்,
அவர்களுக்கு கொரொனா தொற்று இருந்தமை உறுதியானதாக, அரசாங்கத் தகவல்
திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த 19 வயதான
இளைஞர் ஒருவருக்கும் கொழும்பு 2 ஐச் சேர்ந்த 87 வயதான பெண் ஒருவருக்குமே
இவ்வாறு இறப்பின் பின்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்தத்
திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.