மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் தொடக்கம்

சென்னை: கலந்தாய்வு நாளை மறுநாள் தொடக்கம் ... தமிழ்நாட்டில் நடப்பு கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்காக அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 22,643 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13, 487 பேரும் என்று மொத்தம் 36 ஆயிரத்து 100 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இதனையடுத்து விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், தரவரிசை பட்டியலை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் வெளியிட்ட அவர், முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்களின் பட்டியலையும் வாசித்தார்.

இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டதை அடுத்து, எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்குகிறது . அக். 19, 20ம் தேதிகளில் சிறப்பு பிடிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுமென்றும், 20ம் தேதி அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 558 இடங்களுக்கு நேரடி கலந்தாய்வு நடைபெறும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மேலும் நாளை மறுநாள் தொடங்கி 25ஆம் தேதி வரை பொது பிரிவினருக்கு இணையவழி வாயிலாக கலந்தாய்வு நடைபெறும் என்றும், 30-ம் தேதி மாணவர் சேர்க்கையின் முதல் சுற்றின் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.