கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை செலுத்தி கொண்ட சவுதி அரேபியா பட்டத்து இளவரசர்


சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8 கோடியை தாண்டியது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5.5 கோடியை தாண்டியுள்ளது. 17.50 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்
உலக அளவில் கொரோனா பாதிப்பில் சவுதி அரேபியா தற்போது 35-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 178 பேருக்கு தொற்று உறுதியானதால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 61 ஆயிரத்தைக் கடந்துள்ளது
கொரோனாவால் அங்கு மேலும் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 168 ஆக உள்ளது.

தற்போது, வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை அனைத்து நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டது.

அமெரிக்காவில் உருவான பைசர் நிறுவன தடுப்பூசி, இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் உருவாக்கிய தடுப்பூசி, ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசி போன்றவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது அவை பல்வேறு நாடுகளுக்கு விநியோகிக்கும் செயல்முறை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.