தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கை தளர்த்த வேண்டும்; மருத்துவக்குழுவினர் அறிவுறுத்தல்

படிப்படியாக ஊரடங்கை தளர்த்த வேண்டும்... தமிழகத்தில் ஊரடங்கை முழுவதுமாக நீக்காமல் படிப்படியாக தளர்த்த வேண்டும் என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் முதல்வர் இ.பி.எஸ்., கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் மருத்துவ குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது மருத்துவ குழுவில் இடம்பெற்ற ஐசிஎம்ஆர் அமைப்பின் பிரதீப் கவுர் கூறியதாவது:

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிகளவில் கொரோனா பரிசோதனை நடக்கிறது. இந்த பரிசோதனையை குறைக்கக்கூடாது என முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். நிறைய பரிசோதனை நடந்ததால் தான் அதிகளவு கொரோனா பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. பாதிப்பு அதிகரிப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை.

பாதித்தவர்களை 3 நாட்களில் அடையாளம் காண வேண்டும். தமிழகத்தில் தான் மரணமடைந்தவர்களின் விகிதம் குறைவாக உள்ளது. பணியிடங்களில் தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அங்கு, ஊழியர்கள் அனைவருக்கும் மாஸ்க் வழங்க வேண்டும். மாஸ்க் அணிந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில் ஊரடங்கை முழுவதுமாக நீக்காமல், படிப்படியாக தளர்த்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.