இலங்கை போக்குவரத்து சபைக்கு ஏற்பட்ட தினசரி நஷ்டம்; அமைச்சர் தகவல்

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸால் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் பாதிப்பு, பொருளாதாரத்தில் பின்னடைவு என்று பல்வேறு வகையில் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றுக் காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு நாளாந்தம் சுமார் பத்து மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பொதுப் போக்கு வரத்துச் சேவையின் ஊடாக பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்ததன் காரணத்தினால் போக்குவரத்துத் துறை வீழ்ச்சி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 5,300 பஸ்கள் நாளாந்தம் குறைந்த வருமானத்திலேயே சேவையில் ஈடுபடுவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துவது குறைந்து விட்டது என்றும் கூறப்படுகிறது.