சட்டசபை கூட்டத்தொடரை 3 நாட்களுக்கு நடத்துவதற்கு முடிவு

சட்டசபை கூட்டத்தொடரை செப்டம்பர் மாதம் 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை 3 நாட்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு இம்மாதம் 14-ந் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் சட்டசபையை கூட்டாமல் கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 14-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டசபை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து சட்டசபையை நடத்துவதற்கு ஏற்ற வகையில் கலைவாணர் அரங்கம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. சட்டசபையை எத்தனை நாட்களுக்கு நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும்? என்பது பற்றி முடிவு செய்வதற்காக சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

அதில், சட்டசபை கூட்டத்தொடரை 3 நாட்களுக்கு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதாவது செப்டம்பர் 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை கூட்டத்தொடரை நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. மேலும் சட்டசபை கூட்டத்தொடருக்கு 72 மணி நேரத்துக்கு முன் எம்எல்ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.