சட்ட விரோதமாக குடியேறியவர்களை கைது செய்யும் நடவடிக்கை

இங்கிலாந்து: பிரதமரும் களம் இறங்கினார்... இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கைது செய்யும் வேட்டையில் பிரதமர் ரிஷி சுனகும் அரசு அதிகாரிகளுடன் இணைந்து கொண்டார்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். அவர் பதவியேற்ற நாள் முதல் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறார்.

இந்நிலையில் இங்கிலாந்து முழுவதும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கையில் குடிவரவு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

ஹோட்டல்கள், பார்கள் மற்றும் சலூன்கள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை கைது செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, பிரதமர் ரிஷி சுனகும் அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டார்.

அவர் குண்டு துளைக்காத உடையை அணிந்து அதிகாரிகளுடன் சேர்ந்து கைது செய்தார். இந்த நடவடிக்கையின் போது, 20 நாடுகளைச் சேர்ந்த 105 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது செய்யப்பட்டனர்.