சபரிமலையில் பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய இனி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை

திருவனந்தபுரம் : சபரிமலையில் பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்று அதன் தலைவர் அனந்தகோபன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் கூறியது : கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு வசதியை கேரள அரசால் தொடங்கப்பட்டது.

அதனை கேரள போலீசார் நிர்வகித்து வந்தனர். இதையடுத்து தரிசன முன்பதிவு செயல்பாடுகள் முழுவதும் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ஆணை பிறப்பிக்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் தேவஸ்தானம் சார்பில் மனு தாக்கல் ஒன்று செய்யப்பட்டது. மனு மீதான விசாரணையின் போது, தேவஸ்தானத்திற்கு ஆதரவான தீர்ப்பை கேரள ஐகோர்ட்டு வழங்கியது.


மேலும், சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு செயல்பாடுகள் இனி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வராத பட்சத்தில் முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசன அனுமதி வழங்கப்படும்.

நிலக்கல் உள்பட முக்கிய இடங்களில் உடனடி தரிசன முன்பதிவு செய்ய கூடுதல் வசதிகள் செய்யப்படும். ஆதார் உள்பட ஏதாவது ஒரு அடையாள அட்டையை பயன்படுத்தி உடனடி தரிசன அனுமதிக்கு முன்பதிவு செய்யலாம். இனி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவை இல்லை எனவும் கூறியுள்ளார்.